தஞ்சையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க.- நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு


தஞ்சையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க.- நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 7:45 PM GMT)

தஞ்சையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க.- நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி இல்லாமல் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சையை அடுத்த மருங்குளம் நான்கு ரோட்டில் அனுமதி இல்லாமல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வல்லம் போலீசார் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் திருக்கானூர்பட்டி நான்கு ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக பிரசாரம் செய்த தி.மு.க. நிர்வாகி ஒருவர் மீது வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க.வினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story