100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 8:15 PM GMT)

100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீரென வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு எங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவழகனிடம் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுத்தனர். அப்போது அவர் விரைவில் பணி ஆணை பெற்று தொண்டமாந்துறை ஊராட்சியில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் 100 நாள் வேலை வழங்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story