கோமாளிப்பாறையில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நாயக்கர் இன மக்கள் கலந்து கொண்டனர்


கோமாளிப்பாறையில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நாயக்கர் இன மக்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 4 April 2019 10:30 PM GMT (Updated: 4 April 2019 8:51 PM GMT)

கோமாளிப்பாறையில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாயக்கர் இன மக்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோமாளிப் பாறையில் பிரசித்தி பெற்ற சன்னமாடு சலக்கருது பட்டவன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. பேரூர் மந்தா நாயக்கர் மந்தை தலைமையில் திருவிழா நடத்தப்பட்டது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 14 மந்தைகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நாயக்கர் இன மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கு வந்த முக்கியஸ்தர்களுக்கு நாயக்கர் இனபெண்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வை மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டு 14 மந்தைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சாமி மாடுகள் கோவில் முன்பாக அழைத்துவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அனைத்து சாமி மாடுகளும் கொண்டுசெல்லப்பட்டன. அங்கிருந்து சாமி மாடுகள் ஓடிவந்து கோவில் அருகே தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை மாத்து துணியை தாண்டும் நிகழ்வு நடைபெற்றது. மூன்று முறை மாடுகள் மாலை தாண்டியது.

500-க்கும் மேற்பட்ட மாடுகள்

கரடுமுரடான பாதையில் சாமி மாடுகளுடன் நாயக்கர் இன ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடிவந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல், இரண்டாவது, மூன்றாவதாக வந்த சாமி மாடுகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. திருவிழா நடைபெற்ற 10 நாட்களும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் திரளான நாயக்கர் இன மக்கள் கலந்து கொண்டனர். 

Next Story