கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 April 2019 10:45 PM GMT (Updated: 4 April 2019 9:12 PM GMT)

கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வப்போது அனல் காற்று வீசுகிறது. கடும் வெப்பம் காரணமாக மரங்கள், புதர்கள், புற்கள் ஆகியவை கருகி வருகின்றன. மேலும் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களிலும் தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கொடைக்கானல் நகர்ப்பகுதியில் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானல் வில்பட்டி பிரிவில் உள்ள தனியார் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன.

இதேபோல் பர்ன் ஹில்ரோடு பகுதியில் உள்ள தனியார் இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் தீயணைப்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த நிலங்களில் உள்ள மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாயின. மேலும் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

அடிக்கடி தீப்பிடித்து எரிவதால், மலைகளின் இளவரசியின் அழகு கொஞ்சம், கொஞ்சமாக மடிந்து வருகிறது. எனவே கொடைக்கானலில் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கோடைக்காலம் முடியும் வரை கொடைக்கானலில் கூடுதலாக தீயணைப்பு படையினரை நியமித்து தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story