கள்ளக்காதலியை எரித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
காவேரிப்பட்டணத்தில் கள்ளக்காதலியை தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவில் வசித்து வந்தவர் சத்தியா (வயது 42). இவரது கணவர் ஜானி. இவர் இறந்துவிட்டார். இந்தநிலையில் அண்ணா நகரை சேர்ந்த தொழிலாளி அசேன்பாபு (42) என்பவருக்கும், சத்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் ஜின்னா தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நாளடைவில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அசேன்பாபு, வீட்டில் இருந்த மண்எண்ணெயை சத்தியாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அப்போதைய காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து அசேன்பாபுவை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி கள்ளக்காதலியை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த குற்றத்திற்காக அசேன்பாபுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து அவரை போலீசார் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
Related Tags :
Next Story