கருத்துவேறுபாடு காரணமாக காதல் கணவர் பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மங்கலம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவர் பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம்,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி இருந்து தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (28) என்பவரை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் கணவனும்–மனைவியும் மங்கலத்தை அடுத்த இடுவாய் பகுதியில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுநாதன், தனது காதல் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கர்நாடக மாநிலம் சென்று விட்டார்.
இதையடுத்து புவனேஸ்வரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மஞ்சுநாதனிடம் பேசினார். அப்போது ‘‘திருப்பூருக்கு வரமாட்டேன்’’ என்று மஞ்சுநாதன் கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக புவனேஸ்வரி மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து சென்று புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.