தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை


தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 April 2019 10:30 PM GMT (Updated: 5 April 2019 8:03 PM GMT)

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடும்வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தேர்தல் விதிமுறை மீறலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு அகல் விளக்கு ஏற்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் தலைமையில் வாக்களிப்பது தொடர்பான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது கண்டிப்பாக சிறுவர்களை ஈடுபடுத்த கூடாது. மீறி சிறுவர்களை ஈடுபடுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சமூக விரோதிகள் 266 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story