செங்குன்றம் அருகே மொபட் மீது லாரி டயர் விழுந்து பெண் பலி கல்லூரி மாணவி படுகாயம்


செங்குன்றம் அருகே மொபட் மீது லாரி டயர் விழுந்து பெண் பலி கல்லூரி மாணவி படுகாயம்
x
தினத்தந்தி 6 April 2019 10:45 PM GMT (Updated: 6 April 2019 4:55 PM GMT)

செங்குன்றம் அருகே, மொபட் மீது லாரியில் இருந்த டயர் விழுந்ததில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவரது தங்கையான கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.

செங்குன்றம்,

சென்னை பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் கவிதா(வயது 23). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் பரணிகுமார் என்ற மகன் உள்ளனர். கவிதாவின் தங்கை சாருலதா (17). இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

அக்காள்-தங்கை இருவரும் நேற்று காலை மொபட்டில் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனி அருகே ஜி.என்.டி. சாலையில் வந்தபோது, இவர்களுக்கு பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த லாரியில் வைக்கப்பட்டு இருந்த டயர் தவறி, இவர்கள் சென்ற மொபட் மீது விழுந்தது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். சாருலதா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

Next Story