நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் தூத்துக்குடியில் சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் தூத்துக்குடியில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 6 April 2019 9:13 PM GMT)

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என தூத்துக்குடியில் சீமான் பேசினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆல்பர்ட் சாமுவேல், வேல்ராஜ், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ். அப்போது செய்யாத மாற்றத்தை, வரும் 5 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை கொண்டு வர போகிறீர்கள் என்ற கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும். அதே நேரத்தில் இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க, அ.தி.மு.க. அரசுகளும், இந்த 5 வருடத்தில் என்ன செய்ய போகிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்துவிட்டு, தற்போது அதனை மீட்போம் என்று தி.மு.க. கூறுகிறது. ஆனால் காங்கிரசோ முடியாது என்று கூறுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை பற்றி தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி முடியாது என்று சொல்கிறது. மத்திய பாரதீய ஜனதாவும் முடியாது என்று சொல்கிறது. இவர்களுடன் தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை அடிக்கல் நாட்டி வைத்ததும், தொடங்கி வைத்ததும் இவர்கள் தான். கடலில் இதுவரை 840 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை தடுக்க முந்தைய ஆட்சியும், தற்போதைய ஆட்சியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது மீனவர்கள் மீன்பிடிக்க ஆசைப்பட்டு எல்லை தாண்டிபோனதால் தான் சிங்களர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று சொன்னவர்தான் கருணாநிதி. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன பண்ண போகிறார்கள்.

ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி கூறுகிறார். உங்கள் ஆட்சியில் தான் ஏழைகள் உருவானார்கள். இதனை மக்கள் நம்பி விடக்கூடாது. நரேந்திர மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். அது சிறப்பான திட்டம் என்று கூறும் நீங்கள், அந்த சிறப்பான திட்டத்தை வைத்து மக்களிடம் உங்களால் ஓட்டு கேட்க முடியுமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமகல்வி கொடுப்போம். சிறப்பான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். இதற்கு நாம் தமிழர் கட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story