சமையல் தொழிலாளி அடித்துக் கொலை பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்


சமையல் தொழிலாளி அடித்துக் கொலை பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 April 2019 11:00 PM GMT (Updated: 6 April 2019 9:25 PM GMT)

நித்திரவிளை அருகே சமையல் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

நித்திரவிளை,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 48), சமையல் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சனாவாஸ் (42). இவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இதனால், பூத்துறையில் உள்ள வீட்டை வாடகைக்கு விட முயற்சி செய்து வந்தார். ஆனால், நீண்ட நாட்களாக யாரும் வாடகைக்கு வரவில்லை.

இதற்கு சாகுல் அமீதுதான் காரணம் எனவும், அவர் வீட்டை குறித்து தவறான வதந்தி பரப்பி வருவதால் வாடகைக்கு யாரும் வரவில்லை எனவும் சனாவாஸ் நினைத்தார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் பூத்துறை பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் சாகுல் அமீது, சனாவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, சாகுல் அமீதும், சனாவாசும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து, பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, சனாவாஸ், அவருடைய உறவினர் அசரப் (55) ஆகியோர் சாகுல் அமீதை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாகுல் அமீது பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சனாவாஸ், அசரப் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

இறந்த சாகுல் அமீதுக்கு மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story