சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 847 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆய்வு கூட்டத்தில் சிறப்பு டி.ஜி.பி. தகவல்


சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 847 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆய்வு கூட்டத்தில் சிறப்பு டி.ஜி.பி. தகவல்
x
தினத்தந்தி 6 April 2019 11:00 PM GMT (Updated: 6 April 2019 9:41 PM GMT)

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 847 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என ஆய்வு கூட்டத்தில் சிறப்பு டி.ஜி.பி. தெரிவித்தார்.

சேலம்,

சேலம் சரகம் மற்றும் சேலம் மாநகர் பகுதிகளில் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக சிறப்பு டி.ஜி.பி. விஜய்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, போலீஸ் கமிஷனர் சங்கர், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தீபா கனிக்கர் (சேலம்), ராஜன் (தர்மபுரி), பண்டிகங்காதர் (கிருஷ்ணகிரி), அருளரசு (நாமக்கல்), துணை போலீஸ் கமிஷனர்கள் தங்கதுரை, சியாமளா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரையும் முழு அளவில் பயன்படுத்தி, தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு டி.ஜி.பி. அறிவுரை வழங்கினார். மேலும் மத்திய பாதுகாப்பு படையினரையும் நிலைமைக்கு ஏற்ப தேவையான அளவு பணி அமர்த்த அறிவுரை வழங்கினார்.

இது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. விஜய்குமார் கூறியதாவது:-
சேலம் சரகம் மற்றும் சேலம் மாநகர எல்லைக்குள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளும், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிகளின் சில பகுதிகளும் உள்ளன. இதுதவிர பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், ஓசூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதிகளில் 8 ஆயிரத்து 231 வாக்குச்சாவடிகள், 3 ஆயிரத்து 683 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. 375 இடங்களில், 847 வாக்குச்சாவடிகள் அங்கு நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், முந்தைய தேர்தல்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சேலம் சரகத்தில் 328 வழக்குகளும், சேலம் மாநகரத்தில் 27 வழக்குகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிடிவாரண்டு பிறப்பித்து தேடப்பட்டு வந்த, 2 ஆயிரத்து 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சேலம் சரகத்தில் பிடிவாரண்டு பிறப்பித்து தேடப்படும் 60 பேரை பிடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

1,162 நபர்கள், தேர்தலின் போது சட்டம் ஒழுங்கிற்கும் மற்றும் பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் உறுதி பிணைப்பத்திரம் பெறப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மாவட்ட எல்லைகளில், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் 11 சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு முழு அளவில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்ட பகுதிகளில் அடிக்கடி ரோந்து சென்றும், பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கும், தேர்தலின் போது அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 395 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளன. இரவு ரோந்து பணியினையும், வாகன சோதனையையும் பலப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அனுமதி பெற்ற வெடிமருந்து கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள், விடுதிகளில் தணிக்கை செய்யவும், வெளியூர்க்காரர்கள், குற்றப் பின்னணி உள்ள நபர்கள் யாரேனும் உள்ளனரா? என கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு தேவையான அளவில் நிலைக்குழுக்களும், அதி விரைவுப் படையினர் ரோந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story