கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 6 April 2019 10:07 PM GMT)

கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை குடைந்து கடும் சிரமத்திற்கு இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1908–ம் ஆண்டு தொடங்கப்பட்ட மலை ரெயில் சேவை, சுற்றுலா பயணிகளுக்காகவே தொடர்ந்து இயக்கப்படுகிறது. செங்குத்தான மலைப்பகுதிகளில் மலை ரெயில் செல்வதற்காக, கல்லாரில் இருந்து குன்னூர் வரை ரெயில்வே தண்டவாளத்தில் பல்சக்கரம் பொருத்தப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005–ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் மற்றும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. கோடை சீசனை ஊட்டியில் அனுபவிக்க தமிழகம் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் மலை ரெயிலில் பயணிப்பார்கள். கோடை சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம்–ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி, நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார், ரன்னிமேடு, குன்னூர், கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது. காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, ஊட்டிக்கு மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்தது. சிறப்பு மலை ரெயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் 127 பேர் பயணம் செய்தனர். அவர்கள் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்த நீங்கா நினைவுடனும், மகிழ்ச்சியுடனும் ரெயில் நிலையம் வந்திறங்கினர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மலை ரெயில் வனப்பகுதிகள் வழியே குகைகளை கடந்து வந்தது புதிய அனுபவமாக இருந்தது. அப்போது இயற்கை அழகை கண்டு ரசித்தோம். தேயிலை தோட்டங்கள், பசுமையான மரங்கள், வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், கேத்தி பள்ளத்தாக்கு போன்றவற்றை பார்த்தோம். ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ததை மறக்க முடியாது என்றனர்.

சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு மலை ரெயில் வருகிற ஜூன் மாதம் 29–ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம்–குன்னூர் இடையே முதல் வகுப்பிற்கு ரூ.ஆயிரத்து 100, இரண்டாம் வகுப்பிற்கு ரூ.800, மேட்டுப்பாளையம்–ஊட்டி இடையே முதல் வகுப்பிற்கு ரூ.ஆயிரத்து 450, இரண்டாம் வகுப்பிற்கு ரூ.ஆயிரத்து 50, குன்னூர்–ஊட்டி இடையே முதல் வகுப்பிற்கு ரூ.550, இரண்டாம் வகுப்பிற்கு ரூ.450 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், அதன் முன்பு நின்று தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது. கடந்த 2012–ம் ஆண்டுக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story