கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 7 April 2019 6:58 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் வெண்ணாறு ஓடுகிறது. இந்த ஆறு மூலம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, அதங்குடி, தோட்டச்சேரி, பண்டுதக்குடி, சேகரை, பொதக்குடி, காடுவெட்டி, நாகங்குடி, பழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் வெண்ணாற்றில் தற்போது குப்பைகள் நிறைந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் போல் காட்சியளிக்கிறது. ஆற்றில் மணல் திட்டுகள் உள்ளதால் மழைக்காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆறு தூர்வாராததால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.

தூர்வார வேண்டும்

மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் ஆற்றில் களிமண் படிந்துள்ளது. ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டு உள்ளது. வெண்ணாறு தூர்வாரப்படாததால் ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் லெட்சுமாங்குடிக்கு தாமதமாக வந்து சேருகிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லெட்சுமாங்குடியில் உள்ள வெண்ணாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story