கோவில்களில் திருட முயற்சி; கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


கோவில்களில் திருட முயற்சி; கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2019 11:15 PM GMT (Updated: 7 April 2019 8:31 PM GMT)

லாலாபேட்டை அருகே கோவில்களில் திருட முயன்ற கல்லூரி மாணவர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே வயலூரில் மலையாள சாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முன்பு நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமாக ஒரு மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு 3 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர். பின்னர் பொதுமக்கள் அந்த 3 பேரையும் பிடித்து வைத்து கொண்டு, லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த 3 பேரையும் பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள், லாலாபேட்டை அருகே உள்ள பாப்பக்காபட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 19), கடலூர் தாலுகா மாமரத்து பட்டியை சேர்ந்த சேகர் (19), குப்பாச்சி பட்டியை சேர்ந்த பிரபாகரன்(19) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து மலையாள சாமி கோவில் மற்றும் கோடங்கிப்பட்டியில் உள்ள சின்னமலைபட்டி மாரியம்மன் கோவிலிலும் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சதீஷ்குமார் அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story