வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் மு.க.ஸ்டாலின் இன்று குமரி வருகை


வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் மு.க.ஸ்டாலின் இன்று குமரி வருகை
x
தினத்தந்தி 7 April 2019 11:15 PM GMT (Updated: 7 April 2019 8:50 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். அவர் நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

நாகர்கோவில்,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி வருகிறார்.

இதையொட்டி அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரிக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளைவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. (கிழக்கு), மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. (மேற்கு), வேட்பாளர் எச்.வசந்தகுமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் அவர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு மதியம் 1 மணி அளவில் வருகிறார். நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள பயோனியர் பாரடைஸ் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு உரையாற்றுகிறார். அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் ஸ்டாலின் நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story