பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 April 2019 10:30 PM GMT (Updated: 8 April 2019 4:36 PM GMT)

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழாவில் 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப் பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொல்லங்கோடு,

தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த தேவி கோவில்களில் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 30–ந் தேதி தொடங்கியது. கோவில் தந்திரி பிரம்ம கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி யது.  தூக்க நேர்ச்சை தொடங்குவதற்கு முன்னதாக தூக்ககாரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 1,691 குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரை நடக்கிறது.

தூக்ககாரர்கள் நேர்ச்சை குழந்தைகளை தூக்க தேரில் தூக்கி கோவிலை ஒருமுறை சுற்றி வந்து வேண்டுதலை முடித்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கவசங்கள் அணியப்பட்டு இருந்தன.

தூக்க விழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக குழித்துறை அரசு பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் மார்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, நித்திரவிளை, கலிங்கராஜபுரம் ஆகிய இடங்களில் இருந்தும், திருவனந்தபுரம், பாறசாலை ஆகிய இடங்களில் இருந்தும் இயக்கின.

கொல்லங்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம்குமார், இணை செயலாளர் பிஜு குமார், பிரதிநிதி தலைவர் மணிகண்டன் நாயர், பிரதிநிதி துணை தலைவர் விஜயகுமாரன் தம்பி உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story