8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு: விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு: விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 8 April 2019 11:15 PM GMT (Updated: 8 April 2019 7:07 PM GMT)

சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

கொண்டலாம்பட்டி, 

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த சாலை சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்டங்கள் வழியாக அமைய இருந்தது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு நிலம் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது.

இந்தநிலையில் 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் 8 வழிச்சாலை அமைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் விவசாயிகள் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். நேற்று காலை 10.30 மணியளவில் சேலம் மாவட்டம் பூலாவரி புஞ்சைகாட்டில் அந்த பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி ஆரவாரம் செய்தனர். கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

8 வழிச்சாலை தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. 8 வழிச்சாலை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கை அரசு வாபஸ் பெற வேண்டும். நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி கொடுக்க வேண்டும்.

நிலம் அளவீடு செய்ய நியமிக்கப்பட்ட சிறப்பு தாசில்தார்களை திரும்ப பெற வேண்டும். நிலங்களில் நடப்பட்டுள்ள கற்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். விவசாயிகளை போலீசார் கண்காணிப்பதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

இதேபோல் அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரத்திலும் விவசாயிகள் மற்றும் பெண்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு பெண் மகிழ்ச்சி பொங்க நிலத்தை முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மேலும் சிலர் தங்கள் விவசாய நிலத்தில் நடப்பட்டிருந்த கல்லை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதே போல ஆச்சாங்குட்டப்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

Next Story