எருமப்பட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


எருமப்பட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 7:18 PM GMT)

எருமப்பட்டி அருகே பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எருமப்பட்டி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டி அரளி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஓவண்ணன் என்ற மணி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி அம்சா (வயது 40). இவர்களுக்கு ராஜ்குமார் (22) என்ற மகனும், ராஜேஸ்வரி (21) என்ற மகளும் உள்ளனர்.

இவர்களில் ராஜேஸ்வரிக்கும், எருமப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ராஜ்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த அம்சா, கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். பின்னர் அன்று இரவு அரளி பள்ளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் காலை எருமப்பட்டிக்கு வருவதாக மகளிடம் கூறிவிட்டு அம்சா புறப்பட்டு சென்றார்.

இதனிடையே நேற்று காலையில், அம்சா எருமப்பட்டிக்கு வரவில்லை. இதனால் பாலசுப்பிரமணி தனது மாமியாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணி உடனடியாக அரளி பள்ளத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் ஒன்றும் நின்றது. இதையடுத்து கதவை தட்டிப்பார்த்த அவர், திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு கழுத்து நெரிக்கப்பட்டு, தலையை சுவரில் மோதி கொலை செய்யப்பட்டு அம்சா பிணமாக கிடந்தார்.

மேலும் அந்த பிணத்தின் அருகே வாலிபர் ஒருவர் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலசுப்பிரமணி எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அம்சாவை அந்த வாலிபர் கொலை செய்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கோவை குனியமுத்தூர் மதுரை வீரன் தெருவை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் பிரகாஷ்(27) என்பது தெரியவந்தது.

கோவையில் வேலைபார்த்த அம்சாவுக்கும், பிரகாசுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கலாம் என்றும், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

இந்த தகராறை தொடர்ந்து அம்சா சொந்த ஊருக்கு வந்த நிலையில், பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் அரளி பள்ளத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அங்கு தனியாக இருந்த அம்சாவுடன் அவர் தகராறில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அப்போது ஆத்திரம் அடைந்த அவர், அம்சாவை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த கோணத்தில் மட்டுமின்றி சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எருமப்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story