திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆறு தடுப்பணையில் மாணவர் உள்பட 2 பேர் தத்தளிப்பு


திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆறு தடுப்பணையில் மாணவர் உள்பட 2 பேர் தத்தளிப்பு
x
தினத்தந்தி 8 April 2019 10:45 PM GMT (Updated: 8 April 2019 8:22 PM GMT)

திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆறு தடுப்பணை தண்ணீரில் மாணவர் உள்பட 2 பேர் தத்தளித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

திருச்சி,

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நூர் இப்ராகிம் (வயது 21). இவர் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் முகமது இம்ரான் (15). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி உள்ளார். நூர் இப்ராகிம், முகமது இம்ரான் ஆகிய இருவரும் நேற்று காலை கம்பரசம்பேட்டை அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அங்கு தடுப்பணை பக்கம் தடை செய்யப்பட்ட பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி ஆற்றில் சற்று தண்ணீர் அதிகமாக ஓடுகிறது.

இந்த நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த நூர் இப்ராகிம், முகமது இம்ரான் ஆகியோர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். தடுப்பணையில் சுவரை பிடித்தபடி நின்று 2 பேரும் தத்தளித்தனர். மேலும் தங்களை காப்பாற்றும்படி அவர்கள் சத்தம் எழுப்பினர். அப்போது கரையில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் லியோ ஜோசப் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். கயிற்றில் ரப்பர் டியூப்பை கட்டி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரின் அருகே வீசினர். மேலும் அதனை 2 பேரும் தங்களது உடலில் மாட்டி கயிற்றை இறுகபிடித்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கயிறு மூலம் 2 பேரையும் உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே தூக்கினர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக வந்து செயல்பட்டதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் தடை செய்யப்பட்ட பகுதிகளை தாண்டி பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என தீயணைப்பு வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story