குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 8 April 2019 10:45 PM GMT (Updated: 8 April 2019 9:05 PM GMT)

குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

துறையூர்,

துறையூர் அருகே உள்ளது சிக்கதம்பூர்பாளையம் கிராமம். இக்கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிக்கதம்பூர்பாளையத்தில் உள்ள துறையூர்-ஆத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் கூடினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் துறையூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story