புவனகிரி அருகே பெண், தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்


புவனகிரி அருகே பெண், தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்
x
தினத்தந்தி 8 April 2019 10:15 PM GMT (Updated: 8 April 2019 10:57 PM GMT)

புவனகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற அவருடைய தாயும் படுகாயமடைந்தார்.

புவனகிரி, 

புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகள் புவனேஸ்வரி(வயது 48). சம்பவத்தன்று இவருக்கும் இவருடைய தாய் சிவகாமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சிவகாமி, புவனேஸ்வரியின் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் அவர் மீதும் தீப்பற்றியது.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து புவனேஸ்வரி மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகாமி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமசாமி புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story