புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு


புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 April 2019 10:30 PM GMT (Updated: 9 April 2019 8:24 PM GMT)

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, ராமேசுவரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், அறந்தாங்கி, கீரனூர், மணமேல்குடி, திருமயம், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல இலுப்பூர், அன்னவாசல், அரிமளம், திருமயம், கீரனூர், அண்டக்குளம், ஆலங்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் சென்றுதான் பயணிகளை இறக்கி விட வேண்டும்.

ஆனால் சில அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது பணி முடியும் நேரத்தில் அவசர அவசரமாக பஸ் நிலையத்திற்குள் பஸ் உள்ளே செல்லும் இடத்திற்கும், பஸ் வெளியே செல்லும் இடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு, பஸ்சை பணி மனைக்கு எடுத்து செல்கின்றனர். இதேபோல வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வராமல் பஸ் நிலையத்திற்கு முன்பு உள்ள பணிமனைக்கு செல்லும் சாலையிலேயே பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு, பணி மனைக்கு சென்று வருகின்றனர்.

இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் நடந்து சென்று, தங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்கின்றனர். மேலும் பஸ் நிலையத்தின் முன்பு உள்ள சாலை மிகவும் குறுகிய சாலை ஆகும். இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அரசு பஸ்களை பஸ் நிலையத்தின் வெளியே சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சில வேளைகளில் அரசு பஸ் டிரைவர்களுக்கும், லாரி உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story