சமரசம் என்பது நாட்டிற்கும், வீட்டிற்கும் முக்கியமானது மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு


சமரசம் என்பது நாட்டிற்கும், வீட்டிற்கும் முக்கியமானது மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 8:34 PM GMT)

சமரசம் என்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் முக்கியமானது என்று சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி பேசினார்.

கரூர்,

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் சமரசதீர்வு காணும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றம் அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளில் சமரச மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதனால் வழக்கு செலவுகள் குறைவதோடு, நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் வழக்குகள் எவ்வித பாரபட்சமுமின்றி விரைவில் முடித்து வைக்கப்படுகிறது. அந்த வகையில் இத்தகைய சமரச மையங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி கரூர் மாவட்ட கோர்ட்டு கூட்ட அரங்கில் நேற்று காலை நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.சசிகலா வரவேற்று பேசினார்.

மாவட்ட முதன்மை நீதிபதி (முழு கூடுதல் பொறுப்பு) பிருந்தா கேசவாச்சாரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவமனை, போலீஸ் நிலையம், கோர்ட்டு ஆகிய 3 இடங்களையும் வரக்கூடாத இடங்களாக நான் கருதுகிறேன். பல்வேறு பிரச்சினை தொடர்பான வழக்குகளுக்காக கோர்ட்டுகளுக்கு வருவோரிடம் இனியும் ஒருமுறை கோர்ட்டு பக்கமே நீங்கள் வரக்கூடாது. அந்த அளவுக்கு பிரச்சினை ஏதுமின்றி சுமூகமாக செல்ல வேண்டும் என்றுதான் கூறி அனுப்புவேன்.

எடுத்துக்காட்டாக கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதத்தில் ஜெயிப்பவர்கள், வாழ்க்கையில் தோற்றிருக்கிறார்கள். வாக்குவாதத்தில் தோற்றவர்கள், வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறார்கள். இதில் இருந்தே சமரசம் என்பது நாட்டிற்கும், வீட்டிற்கும் முக்கியமான ஒன்றாகும் என்பது தெரிகிறது. எனவே விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்பதை முன்னிலைப்படுத்தி செயல்படும் சமரச மையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஜே.எம்-1 நீதிபதி மோகனவள்ளி, விரைவு கோர்ட்டு நீதிபதி ரகோத்தமன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயபிரகாஷ், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அனிதாகிறிஸ்டி, மக்கள் நீதிமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற மேலாளர் சாகுல் அமீது செய்திருந்தார். முடிவில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி பார்த்தசாரதி நன்றி கூறினார்.

முன்னதாக கரூரில் சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதனை எப்படி அணுகி வழக்குகளுக்கு சுமுக தீர்வு காண்பது என்பது பற்றியும், நிலுவையிலுள்ள வழக்குகளில் ஏற்படும் சமரச தீர்வினால் செலுத்தப்பட்ட கோர்ட்டு கட்டணம் திரும்ப வழங்கப்படுவது, உகந்த தீர்வு எட்டப்படுவதால் மேல்முறையீடு இல்லாதது என அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முதன்மை நீதிபதி பிருந்தா கேசவாச்சாரி, கலெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதே போல், குளித்தலை கோர்ட்டில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி தங்கவேல் தலைமை தாங்கினார். மேலும் சமரச மையத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அவர் ‘பேஜ்’ அணிவித்தார். அதுபோல் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு அவர் வினியோகம் செய்தார். இதில் குளித்தலை கோர்ட்டு நீதிபதிகள் ராஜேஸ், பிரஸ்நேவ், வக்கீல் சங்கத் தலைவர் சாகுல்அமீது, செயலாளர் நாகராஜன், வக்கீல்கள், நீதிமன்ற அலு வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story