கி.வீரமணி காரில் கல்வீசி தாக்கிய இந்து முன்னணி, பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை; மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கலெக்டரிடம் மனு


கி.வீரமணி காரில் கல்வீசி தாக்கிய இந்து முன்னணி, பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை; மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 9:45 PM GMT)

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வந்த காரில் கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர், பா.ஜனதா கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று முன்தினம் இரவு வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கி.வீரமணி வந்த காரின் கண்ணாடி மீது கல்வீசி உடைக்கப்பட் டது. காரின் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கே.எஸ்.பழனிசாமியை அந்த கூட்டணியினர் நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில் கடந்த 8-ந்தேதி மாலை 6 மணியளவில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து கரட்டாங்காட்டில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேச, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் க.செல்வராஜூம் காரில் வந்தனர்.

அப்போது பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் தாராபுரம் ரோட்டில் கரட்டாங்காடு பிரிவு பகுதியில் கார் வந்த போது இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜின் காரின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். மேலும், கொலை செய்யும் நோக்கத்தோடு எங்கள் கட்சி தலைவர்களையும் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களையும் தாக்குவதற்கு முயற்சித்தனர்.

அமைதியாக நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் பாதுகாப்பு இருக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியும், அவருடைய மகனும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த காடேஸ்வரா தங்கராஜ் ஆகியோர் மூல காரணமாக இருந்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story