குன்னூர் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு


குன்னூர் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 9 April 2019 11:04 PM GMT (Updated: 9 April 2019 11:04 PM GMT)

குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு ஓதனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 45). இவர் ஊட்டியில் டைலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வைதேகி. இவர்களுக்கு பிரவீன், நவீன் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். பிரவீன் அருவங்காட்டில் உள்ள பாதுகாப்பு தொழிலாளர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பும், நவீன் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பிரவீனுக்கு இன்று (புதன்கிழமை) தேர்வு நடக்க இருந்தது. இதனால் அவன் வீட்டில் படித்துக்கொண்டு இருந்தான்.
இந்தநிலையில், சசிக்குமார் வீட்டின் அருகே கட்டுமான பணி நடைபெற்று கொண்டு இருந்தது. நேற்று காலை பிரவீன் அந்த வழியாக சென்றான். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி அவனது கழுத்தில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பிரவீனின் உடல் சுமார் 1 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியவாறு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அருவங்காடு போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story