விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பிய வாலிபர் - திண்டிவனத்தில் பரபரப்பு


விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பிய வாலிபர் - திண்டிவனத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 April 2019 10:30 PM GMT (Updated: 11 April 2019 6:13 PM GMT)

திண்டிவனத்தில் விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு மீது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம்,

திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற மருவூர் ராஜா (வயது 34). இவர் மீது வெள்ளிமேடுபேட்டை, பெரியதச்சூர் போலீஸ் நிலையங்களில் சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் கலெக்டர் உத்தரவின்பேரில் ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ராஜா ஜாமீனில் வெளியே வந்தார். இதை அறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டு சிவக்குமார், போலீஸ்காரர் செந்தில்முருகன் ஆகியோர் ஒரு வழக்கு விஷயமாக ராஜாவிடம் விசாரணை நடத்துவற்காக அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் ராஜா அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். இதனால் உஷாரான ஏட்டு சிவக்குமார், ராஜாவை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது ராஜா தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சிவக்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்று விட்டார். இதில் ஏட்டு சிவக்குமாரின் வலது கால் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வலியால் அலறித்துடித்த அவரை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பிச் சென்ற ராஜாவை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story