கூடுவாஞ்சேரியில் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது


கூடுவாஞ்சேரியில் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 April 2019 9:30 PM GMT (Updated: 11 April 2019 7:28 PM GMT)

கூடுவாஞ்சேரியில் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், ஆதனூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அடிக்கடி பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, உத்தரவின்பேரில் கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பி சாஸ்திரி, வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் ஆகியோர் தலைமையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திலீப்குமார், கஜேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஊரப்பாக்கம் அருகே அய்யஞ்சேரி கூட்ரோடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.

இதனையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதையும், வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதையும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் செங்கல்பட்டு அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமம் கல்வாரி நகர் பகுதியை சேர்ந்த முத்து (வயது23), என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட முத்துவை செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story