வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்


வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 12 April 2019 5:24 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை யொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமயம், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நேற்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 261 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள 338 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 237 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 266 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருமயம் தாசில்தார் சுரேஷ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலை மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்றது.

Next Story