தோஷம் கழிப்பதாக கூறி தபால் ஊழியர் மனைவியிடம் நகை அபேஸ் - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


தோஷம் கழிப்பதாக கூறி தபால் ஊழியர் மனைவியிடம் நகை அபேஸ் - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 April 2019 10:45 PM GMT (Updated: 12 April 2019 6:12 PM GMT)

தோஷம் கழிப்பதாக கூறி தபால் ஊழியர் மனைவியிடம் நகையை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் திருநீலகண்டன். இவர் விழுப்புரம் தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 22). இந்நிலையில் நேற்று முன்தினம் திருநீலகண்டன், வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவருடைய மனைவி தமிழரசி மட்டும் இருந்தார்.அந்த சமயத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தமிழரசி வீட்டிற்கு சென்று அவரிடம், உங்களுடைய கணவரும், நானும் நண்பர்கள், அவர் கூறியதன்பேரில் நான் இங்கு வந்துள்ளேன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்.

பின்னர் அந்த வாலிபர், தமிழரசியிடம் உங்கள் குடும்பத்திற்கு தற்போது நேரம் சரியில்லை என்றும் தோஷம் கழித்துவிட்டால் குடும்ப பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும் என்றும் கூறினார். இதை உண்மையென நம்பிய தமிழரசி, தோஷம் கழிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு தமிழரசியிடம் வீட்டு சமையல் அறைக்குள் சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வரும்படி அந்த வாலிபர் கூறினார். அதன்படி தமிழரசி, ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். அப்போது தோஷம் கழிக்கும்போது நகை ஏதும் அணிந்திருக்கக்கூடாது என்று கூறிய அவர், தமிழரசியிடம் உங்களுடைய கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கழற்றி இந்த பாத்திரத்தில் போடுங்கள் என்று கூறினார். அவர் கூறியபடி தமிழரசி, தான் அணிந்திருந்த 4 பவுன் நகையை கழற்றி அந்த பாத்திரத்தில் போட்டார்.

அதன் பின்னர் அந்த வாலிபர், ஏதோ பூஜை செய்வதுபோன்று பாவனை செய்தார். சிறிதுநேரம் கழித்து அந்த பாத்திரத்தை தமிழரசியிடம் கொடுத்து, அதனை பூஜை அறையில் வைத்துவிட்டு முகத்தை தண்ணீரில் கழுவிக்கொண்டு வரும்படி கூறினார். அதன்படி நகை இருந்த அந்த பாத்திரத்தை பூஜை அறையில் வைத்துவிட்டு முகம் கழுவுவதற்காக தமிழரசி, குளியல் அறைக்கு சென்றார்.

அந்த சமயத்தில் அந்த வாலிபர், பூஜை அறைக்குள் நைசாக நுழைந்து அந்த பாத்திரத்தில் இருந்த நகையை அபேஸ் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.80 ஆயிரமாகும். நகையை பறிகொடுத்த தமிழரசி, இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தப்பியோடிய அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தோஷம் கழிப்பதாக கூறி நூதன முறையில் தபால் ஊழியர் மனைவியிடம் நகையை அபேஸ் செய்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story