நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு


நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 12 April 2019 10:00 PM GMT (Updated: 12 April 2019 6:12 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ஊட்டி,

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை சென்றது.

அணிவகுப்பில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியபடி சென்றனர். இதில் உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து காந்தல் பகுதியில் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரிக்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) துணை ராணுவத்தினர் வருகின்றனர். அதனை தொடர்ந்து துணை ராணுவத்தினர் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முன்கூட்டியே போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story