திருத்தணியில் தாய், மகன் கொலை வழக்கில் 3 பேர் கைது


திருத்தணியில் தாய், மகன் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 12 April 2019 7:23 PM GMT)

திருத்தணியில் தாய், மகன் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருத்தணி,

திருத்தணி பீ.டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் வனபெருமாள். காவலாளி. இவரது மனைவி வீரலட்சுமி (வயது 45). இவர்களது மகன் போதிராஜா (10). கடந்த திங்கட்கிழமை வீரலட்சுமியும், போதிராஜாவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த 21 பவுன் நகைகளும், ரூ.20 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த இரட்டை கொலை சம்பந்தமாக போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இரட்டை கொலை தொடர்பாக வனபெருமாள் வீட்டின் அருகே வசித்துவரும் வெங்கட் என்ற வெங்கடேசன் (23) என்ற பால் வியாபாரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பால் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய வெங்கட், வனபெருமாளின் வீட்டில் திருடமுயன்றதும் இதை பார்த்த வீரலட்சுமி மற்றும் அவரது மகன் போதிராஜாவை வெங்கட் கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த நகைகளை பொன்பாடியை சேர்ந்த உமாபதி (25) மற்றும் நெமிலியை சேர்நத சுரேஷ் (24) ஆகியோரிடம் கொடுத்து விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேசன் மற்றும் நகைகளை விற்க உதவி செய்த உமாபதி மற்றும் சுரேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story