திண்டிவனம் அருகே, தூக்கில் பிணமாக தொங்கிய பெண் - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தாய் புகார்


திண்டிவனம் அருகே, தூக்கில் பிணமாக தொங்கிய பெண் - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 12 April 2019 10:15 PM GMT (Updated: 12 April 2019 8:19 PM GMT)

திண்டிவனம் அருகே பெண், தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மனைவி கமலா (வயது 37). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கமலா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி ஒலக்கூர் போலீஸ் நிலையத்துக்கும், கமலாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து கமலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்கில் தொங்கிய கமலாவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கமலாவின் தாய் வரலட்சுமி ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அதனால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து கமலா குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story