வழிதெரியாமல் சென்றதால் விபரீதம்: தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதல் இறங்கி ஓடியதால் 5 பேர் தப்பினர்


வழிதெரியாமல் சென்றதால் விபரீதம்: தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதல் இறங்கி ஓடியதால் 5 பேர் தப்பினர்
x
தினத்தந்தி 12 April 2019 11:14 PM GMT (Updated: 12 April 2019 11:14 PM GMT)

உடுமலை அருகே வழி தெரியாமல் சென்றதால் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதியது. காரில் இருந்தவர்கள் சரக்கு ரெயில் மோதுவதற்கு முன் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக 5 பேரும் உயிர் தப்பினர்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை–தளி சாலையில் தண்டவாளத்தின் மேல் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2015–ம் ஆண்டு முதல் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தின் கீழே அணுகு சாலைகள் உள்ளன. மேம்பாலத்திற்கு கீழ் கிழக்குப்பகுதியில் உள்ள அணுகு சாலை தண்டவாளம் பகுதிக்கு சில அடி தூரத்திற்கு முன்னதாகவே முடிந்து விடும்.

மேம்பாலத்தின் கீழ் மேற்கு பகுதியில் உள்ள அணுகு சாலை தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை வழியாகவும் செல்கிறது. இதன் வழியே கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த அணுகுசாலை மேம்பாலத்தின் இருபுறமும் இணையும் வகையிலும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு பல்லடத்தில் இருந்து 5 பேர் ஒரு காரில் கேரள மாநிலம் மறையூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டனர். அந்த கார் தளி சாலையில் மேம்பாலத்தின் கீழே கிழக்குப் பகுதியில் உள்ள அணுகு சாலை வழியாக சென்றது. இரவு நேரம் என்பதால் அணுகுசாலை தண்டவாளத்திற்கு முன்பாக முடிந்ததை கார் ஓட்டிய டிரைவர் கவனிக்கவில்லை. சாலையை கடந்த கார் தண்டவாளத்தை ஒட்டி கொட்டப்பட்டு உள்ள ஜல்லிக்கற்களில் சிக்கி கொண்டது. உடனே டிரைவர் காரை பின்னோக்கி எடுக்க முயன்றும் எடுக்க முடியவில்லை. வழி தெரியாமல் வந்து தண்டவாளத்தில் கார் சிக்கி கொண்டதால் அதில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.

அந்த நேரத்தில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. இதை பார்த்ததும் டிரைவரும், காரில் வந்தவர்களும் அதில் இருந்து கீழே இறங்கி வெளியே ஓடினார்கள்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த சரக்கு ரெயில், தண்டவாளத்தை ஓட்டி நின்றிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் ரெயில் என்ஜினில் சிக்கிய கார் சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. திடீரென்று ரெயில் என்ஜின் மீது ஏதோ மோதியதை அறிந்த டிரைவர் ரெயிலை நிறுத்தினார். அப்போது கார் ஒன்று ரெயில் தண்டவாளம் அருகே வீசப்பட்டு கிடப்பதை டிரைவர் பார்த்தார். ரெயில் என்ஜின் மோதியதில் கார் நொறுங்கியது. அதில் இருந்த 2 டயர்கள் அருகில் புதருக்குள் கிடந்தன.

பின்னர் இது குறித்து உடுமலை ரெயில் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பிறகு சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. நல்லவேளை காரில் இருந்த 5 பேரும் உடனே இறங்கி ஓடி விட்டதால் இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார், பழனி ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, உதவி சப்–இன்ஸ்பெக்டர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர். விபத்திற்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு உடுமலை ரெயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த காரில் வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story