பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 April 2019 10:30 PM GMT (Updated: 13 April 2019 7:17 PM GMT)

பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்டது போடூர் போயர் தெரு. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிடைக்கும் கூலி வேலை செய்து வாழ்பவர்கள். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க கோரி பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் கிராமமக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் சீராக குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில் குடிநீர் கேட்டு நேற்று கிராமமக்கள் காலிக்குடங்களுடன் பென்னாகரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் பென்னாகரம் தாலுகா அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போடூர் போயர் தெருவுக்கு ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராமமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Next Story