மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 13 April 2019 10:30 PM GMT (Updated: 13 April 2019 7:50 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 7,892 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று அந்தந்த பகுதியில் நடந்தது.

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1,720 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது. சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

இதேபோல் ராசிபுரத்தில் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பரமத்திவேலூரில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர். கல்லூரியிலும், குமாரபாளையத்தில் ராகவேந்திரா பாலிடெக்்்்்்்னிக் கல்லூரியிலும், சேந்தமங்கலத்தில் வேதலோக வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும் நேற்று 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் ‘வி.வி.பேட்’ எந்திரம் ஆகியவற்றை கையாள பயிற்சி கொடுக்கப்பட்டது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. மேலும் இங்கு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவும் செய்து காண்பிக்கப்பட்டது. தபால் வாக்குகளை செலுத்துவதற்கு வசதியாக பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வாக்களிக்க தேர்தல் பணி சான்றும் வழங்கப்பட்டது.

நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் நடந்த 3-ம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட பயிற்சி வகுப்பில் மொத்தம் 7,892 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story