திருமங்கலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலி


திருமங்கலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 13 April 2019 10:15 PM GMT (Updated: 13 April 2019 8:32 PM GMT)

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய மதுரையை சேர்ந்த வாலிபர் தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.

திருமங்கலம்,

மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்தவர் சுதர்சனம் (வயது 32). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 5 மாத குழந்தை உள்ளனர். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து சென்னையில் இருந்து மதுரை வருவதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

அந்த ரெயில் நள்ளிரவு மதுரை வந்தது. அப்போது சுதர்சனம் அசந்து தூங்கி கொண்டிருந்தார். இதனால் அந்த ரெயில் மதுரையை கடந்து சென்று கொண்டிருந்தது. இதற்கிடையே சுதர்சனம் கண்விழித்து பார்த்தபோது, அந்த ரெயில் திருமங்கலம் அருகில் சென்று கொண்டிருந்தது.

இந்தநிலையில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் வந்தபோது, பிளாட்பாரத்தில் சற்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனால் சுதர்சனம் ரெயிலில் இருந்து இறங்கினார். இதற்கிடையே கால் தடுமாறி அவர் பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே தண்டவாளத்தினுள் விழுந்தார். இதில் ரெயில் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுதர்சனம் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் இறந்துபோன சுதர்சனம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story