நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது திருவண்ணாமலையில் வைகோ பேச்சு


நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது திருவண்ணாமலையில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 13 April 2019 11:15 PM GMT (Updated: 13 April 2019 10:17 PM GMT)

நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது என திருவண்ணாமலையில் வைகோ பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து தி.மு.க.வின் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் சீனிகார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எல்.பாசறை பாபு வரவேற்றார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து பேசியதாவது:-

இந்த கூட்டம் அண்ணா சிலை அருகே நடைபெறுகிறது. இதில் அண்ணா பெயரைக் கொண்ட வேட்பாளருக்கு பிரசாரம் செய்வதற்கு நான் பெருமைப்படுகிறேன். மக்கள் கலைஞர் இருந்த இடத்தில் தற்போது ஸ்டாலினை வைத்து பார்க்கின்றனர். நல்லாட்சி நடத்த ஸ்டாலின் வந்துள்ளார். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதியளித்துள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்.

நரேந்திர மோடி, புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 41 துணை ராணுவனத்தினர் இறந்த சம்பவத்தை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். ராணுவம் யாருக்கும் சொந்தமில்லை. எந்தக் கட்சிக்கும் சொந்தமில்லை. ராணுவத்தை வைத்து வாக்கு சேகரிப்பதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முப்படையில் முக்கியமானது விமானப்படை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரூ.526 கோடிக்கு போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி அரசு ரூ.1,670 கோடி மதிப்பில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு கொடுத்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது.

8 வழி சாலையினால் பல ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாக இருந்தது. இந்தத் திட்டத்தை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. நாட்டில் 83 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி பொய் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் முதல் குற்றவாளி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இவற்றை மனதில் கொண்டு மோடி ஆட்சிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டிற்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டங்களில் ஆபத்தான கருத்துக்களை சொல்லி வருகிறார். கர்நாடகாவில் கமிஷன் ஆட்சி நடப்பதாக கூறி பிரச்சாரம் செய்கிறார். அது இங்கு பேச வேண்டிய பிரசாரம் ஆகும். இந்த பகுதிக்கு முக்கிய பிரச்சினையாக திண்டிவனம் - ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரெயில் பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது. நெசவாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் பட்டு ஜவுளி பூங்கா அமைப்பதாக வாக்குறுதி மட்டுமே உள்ளது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. அதில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் அப்போதுதான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளான விவசாயிகள் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, ஏழை எளிய நடுத்தர மக்கள் வங்கிகளில் 5 சவரன் நகை வரை கடன் பெற்றவர்களுக்கு அதனை ரத்து செய்யும் அறிவிப்பு போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

மேகதாது அணை கட்டப்பட்டு வருவதால் நம் பகுதிக்கு நீர் ஆதாரங்கள் வெகுவாக குறைந்துவிடும். இதுபோன்ற திட்டங்கள் தடுக்க அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என உள்ளது அதனை மத்திய, மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்காது. நாம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த திட்டங்களை சாத்தியமாக மாற்ற முடியும்.

எனவே விழிப்பாக இருந்து கை சின்னத்திற்கு வாக்களித்து எம்.கே.விஷ்ணுபிரசாத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.சிவானந்தம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story