சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 April 2019 10:00 PM GMT (Updated: 13 April 2019 10:36 PM GMT)

சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம், 

நாகை பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதனால் தற்போது கோடை சாகுபடிகளான உளுந்து, பயறு, கடலை, பருத்தி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அழிச்சமங்கலம், பாலையூர் தென்பாதி, புலியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆற்றுப்பாசனத்தையே பெரும்பாலும் நம்பியுள்ள நாகை பகுதி விவசாயிகள், ஆழ்துளை கிணற்று தண்ணீர் மூலம் பருத்தி சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

பாலையூர் தென்பாதி, அழிஞ்சமங்கலம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த வயலில் புழுதி அடித்து, தண்ணீர் பாய்ச்சி பருத்தி விதைகளை விதைக்கிறோம். 4 நாட்களில் விதையானது முளைத்து 50 நாட்களில் பூ பூக்க ஆரம்பிக்கும். 100 நாட்களில் பருத்தியை பறிக்க ஆரம்பித்து விடுவோம். இடைப்பட்ட காலத்தில் சப்பாத்தி பூச்சி என்கிற ஒரு வகையான பூச்சி இனம் பருத்தியை அதிகளவில் தாக்குகிறது.

தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகிறது. சம்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண்மை துறை அதிகாரிகள், பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். பருத்தியை தாக்கும் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது. அதற்காக எந்த பூச்சி மருந்து மற்றும் உரங்களை பயன்படுத்துவது. எந்த சூழலில் பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

இடுபொருட்களில் விலை அதிகமாக உள்ளதால், தற்போது பருத்தி கிலோவுக்கு ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்தால்தான் லாபம் கிடைக்கும். பூச்சி மருந்து மற்றும் உரங்களை மானிய விலையில் அரசு வழங்கவேண்டும். சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story