பெங்களூருவில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு


பெங்களூருவில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 14 April 2019 12:19 AM GMT (Updated: 14 April 2019 12:19 AM GMT)

பெங்களூருவில் முன்விரோதத்தில் வாலிபரை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு அனுமந்தநகர் அருகே ராஜேந்திரநகரில் வசித்து வந்தவர் பரத் (வயது 20). இவரது சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா ஆகும். நேற்று முன்தினம் இரவு அனுமந்த நகர் அருகே காளிதாசா லே-அவுட் பகுதியில் பரத் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பரத்தை வழிமறித்தனர்.

பின்னர் அந்த மர்மநபர்கள் நடுரோட்டில் வைத்து பரத்தை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர். பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய பரத் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக இதுபற்றி அறிந்ததும் அனுமந்தநகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பரத் உடலை கைப்பற்றியும் விசாரித்தனர். மேலும் தகவல் அறிந்ததும் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது சாம்ராஜ்பேட்டை பகுதியில் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பரத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், சிறையில் இருந்து 6 நாட்களுக்கு முன்பு தான் அவர் வெளியே வந்ததும் தெரியவந்தது.

மேலும் ரவுடிகளுடன் சேர்ந்து குற்ற சம்பவங்களில் பரத் ஈடுபட்டதும், இதனால் முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story