பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய 10-ம் வகுப்பு மாணவி, தீக்குளித்து தற்கொலை 4 பேருக்கு வலைவீச்சு


பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய 10-ம் வகுப்பு மாணவி, தீக்குளித்து தற்கொலை 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 April 2019 11:15 PM GMT (Updated: 14 April 2019 7:15 PM GMT)

திருவாரூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தப்பிய 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

அப்போது கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

ஆனாலும் மாணவியை விடாமல் 4 பேரும் துரத்தி சென்றனர். ஒரு காட்டுப்பகுதியில் நுழைந்த அந்த மாணவியை 4 பேரும் பிடித்து கீழே தள்ளி, அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். 4 பேரின் கோரப்பிடியில் இருந்து மீண்டும் தப்பித்த அந்த மாணவி தனது வீட்டுக்கு வந்து மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாஸ் (வயது21), அஜித்(19), விஜய் (20), முருகேசன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததும், இதனால் மனவேதனை அடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் உடனடியாக கைது செய்யக்கோரி வடகோவனூர் கிராம மக்கள் கூத்தாநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story