பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது


பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 7:23 PM GMT)

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 33.33 அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு செல்லும். வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர் மூலம் 3 ஆயிரம் ஏக்கரும், ஏரிகள் மூலம் 7 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு பர்கூர் மலைப்பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 30 அடி தான் உயர்ந்தது.

இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் 4–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 14 அடியாக இருந்தது. இதனால் அணை குட்டை போல் காட்சி அளிக்கிறது.


Next Story