குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி


குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 7:31 PM GMT)

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணி,

எருசலேமில் உள்ள பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப்பணியை தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். இது “லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம்” என்று அழைக்கப்படுகிறது. தவக்காலம் 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது

இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏசுகிறிஸ்து எருசலேம் நகரத்துக்குள் வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவு கூரும் வகையில் குருத்தோலை பவனி நடைபெற்று வருகிறது.

குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பேராலய துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், அருட்சகோதரர்கள், திரளான கிறிஸ்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

Next Story