மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்ட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 7:39 PM GMT)

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்க விட்டபடி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தீயம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சரண்குமார் (வயது 20), மணிகண்டன் என்ற மதி (19). நண்பர்களான இருவரும் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தங்களிடம் இருந்த கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டு, கூச்சலிட்டபடி சென்றனர்.

இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அவர், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று சரண்குமார், மணிகண்டன் இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள், ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ எடுப்பதற்காக இதுபோல் கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டபடி சென்றதாக தெரிவித்தனர்.

இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நடந்து கொள்ளும் வாலிபர்களை பெற்றோர் கண்டிக்க வேண்டும் என மாதவரம் துணை கமிஷனர் ரவளிபிரியா அறிவுறுத்தினார்.

Next Story