சேலம் மணக்காட்டில் கத்தியால் குத்தப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


சேலம் மணக்காட்டில் கத்தியால் குத்தப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 8:48 PM GMT)

சேலம் மணக்காட்டில் கத்தியால் குத்தப்பட்ட பெண் இறந்ததால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவருடைய மனைவி வசந்தி (வயது 42). இவர்களுக்கு புஷ்பா உள்பட நான்கு மகள்கள் உள்ளனர். மகேஸ்வரன் இறந்துவிட்டார். புஷ்பாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு புஷ்பா அதே பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் ஆனந்த் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களை புஷ்பாவின் தாய் வசந்தி சமாதானப்படுத்தினார். ஆனால் பிரச்சினைக்கு காரணம் வசந்தி தான் என கருதி ஆனந்த், மாமியாரை கத்தியால் குத்தினார்.

இதைத்தொடர்ந்து காயமடைந்த வசந்தி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சரியாகிவிட்டது என வசந்தி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதனிடையே வசந்திக்கு கத்தியால் குத்தப்பட்ட இடத்தில் சீல்பிடித்தது. இதன் காரணமாக வசந்தி மீண்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஆனந்தை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Next Story