முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம் அடித்துக்கொன்றது யார்? போலீசார் விசாரணை


முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம் அடித்துக்கொன்றது யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 9:14 PM GMT)

முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி,

முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தும்பலம் கிராமத்தின் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் ஊதா நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். அவருடைய உடல் அருகே முட்புதரில் ரோஸ் நிற சட்டை கிடந்தது. மேலும் பதிவு எண் இல்லாத மொபட் ஒன்றும், அங்கு சாய்ந்த நிலையில் கிடந்தது. இறந்து கிடந்தவரின் தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்று போலீசார் கருதினர். மேலும் அவரை மர்ம நபர்கள் வேறு எந்த பகுதியிலாவது வைத்து அடித்து கொலை செய்து, உடலை இங்கே கொண்டு வந்து வீசியிருக்கலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து இறந்து கிடந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்பது குறித்து சுற்றுப்புற கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அடித்து கொன்றது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி அருகே வனப்பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story