நெய்வேலியில், வாலிபர் அடித்துக் கொலை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


நெய்வேலியில், வாலிபர் அடித்துக் கொலை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 April 2019 10:00 PM GMT (Updated: 14 April 2019 10:14 PM GMT)

நெய்வேலியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி 30-வது வட்டம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மகன் எலி என்கிற அருள்ராஜ்(வயது 26). இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு உருட்டுக்கட்டைகளுடன் வந்த 3 பேர், அருள்ராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென அருள்ராஜை உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்தனர். இதில் படுகாயமடைந்த அருள்ராஜ் மயங்கி விழுந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள்ராஜின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், அருள்ராஜை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அருள்ராஜ் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தெர்மல் போலீசார் விரைந்து வந்து, அருள்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை அடித்து கொலை செய்த 3 பேர் யார்?, எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story