“மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்


“மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்
x
தினத்தந்தி 14 April 2019 9:45 PM GMT (Updated: 14 April 2019 10:19 PM GMT)

“மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்“ என வள்ளியூர் பகுதிகளில் தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம் செய்தார்.

வள்ளியூர், 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று வள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று காலை சின்னம்மாள்புரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் துலுக்கர்பட்டி, கண்ணநல்லூர், கோவன்குளம், ஆனைகுளம், அச்சம்பாடு, ஆ.திருமலாபுரம், தெற்கு வள்ளியூர், கடம்பன்குளம், கும்பிளம்பாடு, பெத்தரெங்கபுரம், தனக்கர்குளம், அடங்கார்குளம், சிதம்பரபுரம், யாக்கோபுரம், ஊரல்வாய்மொழி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மேளதாளம் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

அப்போது வேட்பாளர் ஞானதிரவியம் பேசியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும்போது விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும். நீட் தகுதி தேர்வு ரத்து செய்யப்படும். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ மையங்களில் உள்ளுர் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாலையில் இருக் கன்துறை, பெருமணல், செட்டிகுளம், கூட்டப்புளி, லெவிஞ்சிபுரம், தெற்குகருங்குளம், பழவூர், ஆவரைகுளம், வடக்கன்குளம், காவல்கிணறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி, மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் கிரகாம்பெல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஆச்சியூர் ராமசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, நகர இளைஞரணி அமைப்பாளர் தில்லை, மந்திரம், லட்சுமணன், காங்கிரஸ் வட்டார தலைவர் சுயம்புலிங்கதுரை, சேகர், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு, மனித நேய மக்கள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் ஜாவித் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story