“தமிழகத்தை ஆள்கிறவர்கள் தஞ்சாவூர் பொம்மைகளாக உள்ளனர்” தூத்துக்குடி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு


“தமிழகத்தை ஆள்கிறவர்கள் தஞ்சாவூர் பொம்மைகளாக உள்ளனர்” தூத்துக்குடி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 10:45 PM GMT)

“தமிழகத்தை ஆள்கிறவர்கள் தஞ்சாவூர் பொம்மைகளாக உள்ளனர்” என்று தூத்துக்குடி பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்குமரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நடராஜன் ஆகியோரை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மகாலில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

நாட்டை பிளவுபடுத்தும் சக்தி உள்ளது. அதனை அகற்ற வேண்டும். தூத்துக்குடியில் பெரும் துயரம் நடந்தது. தைரியமாக, சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாமல் போலீஸ் துறையை ஏவல் துறையாக அரசு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. மக்களை மட்டுமல்ல, இந்த அரசை அகற்றி போலீஸ் துறையையும் காப்பாற்ற வேண்டும். ஆணை பிறப்பித்தால், அதனை போலீசார் செயல்படுத்துவார்கள். தூத்துக்குடி என்றால் துப்பாக்கி சூடும், அரசின் அராஜகமும்தான் நினைவுக்கு வருகிறது. அரசு என்றால் ஆணவம் மட்டுமில்லை, ஆளுமையும் வேண்டும். ஆனால் தமிழகத்தை ஆள்கிறவர்கள் மண்ணால் செய்த தஞ்சாவூர் பொம்மைகளாக தான் உள்ளனர்.

ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக மக்கள் பந்தல் இன்றி திறந்தவெளியில் போராட்டம் நடத்தினார்கள். இந்த அவல நிலை எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் மேலும் உந்தி தள்ளியது. இன்று மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது. என்னை உந்தி தள்ளிய சம்பவங்களில் தூத்துக்குடி சம்பவமும் ஒன்று. தூத்துக்குடியை பொறுத்தவரை ஆலை வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் வேண்டாம். இங்கு மக்களுக்கு வந்த நோய்கள் அரசின் அஜாக்கிரதையால் வந்தது.

மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ஒரு கட்சி அனுமதி வழங்கியது. மற்றொரு கட்சி விரிவாக்கம் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் தொழிற்சாலையை இயங்க அனுமதித்தது. யார் பிரதமராக வந்தாலும் தமிழகத்தை நசுக்க முடியாது. 1,000 பேர் இறப்பதை தடுக்க 13 பேர் இறந்து உள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டே துப்பாக்கி சூட்டை நடத்தியது. என்னை போன்றவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.

நம் நாட்டின் காவல் தெய்வங்கள் ராணுவத்தினரை ஓட்டுக்காக அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களின் ரத்தத்தை வைத்து பிரதமர் ஓட்டு கேட்கிறார். அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். எனக்கு பல சவால்கள் உள்ளன. நான் 40 இடங்களில் நிற்பதாகத்தான் நினைக்கிறேன். வேட்பாளர்களின் நற்பணிகளை பார்த்த பிறகு அவர்களது உண்மையான முகம் தெரியும். நான் பல்லக்கில் செல்லவில்லை. பல்லக்கு தூக்கியாக இருக்கிறேன்.

வெற்றியை நீங்கள் தர வேண்டும். உங்கள் நாடாளுமன்ற குரல் பொன்குமரன், சட்டமன்றத்தின் குரல் நடராஜன். இவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள். 10 மணிக்கு மேல் டார்ச்லைட் கொண்டு செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறும் அளவுக்கு சின்னம் பிரபலம் அடைந்து உள்ளது. எனக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. நான் உழைத்தால் பார்ப்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். எனது எஞ்சிய வாழ்க்கை மக்களாகிய உங்களுக்காகத்தான். என் வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையதாகட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ் பாலா, ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து வந்து சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story