அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது ஜி.கே.வாசன் பேச்சு


அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 3:17 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது என ஜி.கே.வாசன் கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இதையொட்டி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே பிரசார கூட்டம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–


நான் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்து விட்டேன். இது 100–வது கூட்டமாகும். இதுவரை நான் சென்ற கூட்டங்களில் இருந்து மக்களின் மகத்தான ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.

தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. காரணம் தமிழகம் என்றாலே காவிரி பிரச்சினை. காவிரி பிரச்சினை என்றாலே தஞ்சாவூர் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.


தஞ்சை தொகுதி வாக்காளர்கள் மாறி, மாறி ஒருவருக்கே வாக்களித்து ஏமாற மாட்டார்கள். பாரம்பரியமிக்க குடும்ப வேட்பாளரான என்.ஆர்.நடராஜனை வெற்றி பெறச்செய்யுங்கள். அவரை தேர்ந்தெடுத்தால் தன்னுடைய தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவார். அவர் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்.

பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் இந்தியா இதுவரை காணாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டில் முதல்–அமைச்சர், துணை முதல் அமைச்சர், மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story