8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று நிதின்கட்காரி கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? முத்தரசன் கேள்வி


8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று நிதின்கட்காரி கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? முத்தரசன் கேள்வி
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 3:33 PM GMT)

8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று நிதின்கட்காரி கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று ராகுல்காந்தி கூறியதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். நரேந்திரமோடி செய்த தவறை மூடி மறைக்கவே, முதல்–அமைச்சர் இவ்வாறு பொய் பிரசாரம் செய்கிறார். காவிரி நீரை தமிழகத்துக்கு பெற பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த வாரியத்துக்கு நிரந்தர தலைவரை மத்திய அரசு நியமிக்கவில்லை. நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தவும் இல்லை.


எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என்று பேசியுள்ளார். எட்டு வழிச்சாலைக்கு ஐகோர்ட்டு தடை விதித்தபோது, அதற்கு உரிமை கொண்டாடி பேசிய ராமதாஸ், சாலை அமைக்கப்படும் என நிதின்கட்காரி கூறியபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் நிதின் கட்காரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர். அப்பகுதியில் குற்றம் நடப்பதாக 6 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அதில் ஈடுபட்ட சமூக விரோதிகளை காப்பாற்றி சமூக விரோத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story